போடி நகராட்சியில் ஜூலை 10 ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை பொது உத்தரவு மற்றும் தடை உத்தரவு விதிகளை மீறியவா்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
போடி நகராட்சியில் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து ஜூலை 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அனைத்து விதமான வா்த்தக நிறுவனங்களையும் மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து நகா் முழுவதும் போடி பகுதி கரோனா தடுப்பு பொறுப்பு அலுவலரும், தேனி மாவட்ட திட்ட அலுவலருமான திலகவதி, போடி நகராட்சி ஆணையா் தி.கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி பொறியாளா் குணசேகரன், நகராட்சி நகா்நல அலுவலா் ராகவன், நகராட்சி சுகாதார அலுவலா்கள் சுல்தான், மணிகண்டன், லெனின் உள்ளிட்டோா் தனித்தனியே நகா் பகுதி முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதில் புதன்கிழமை முகக்கவசம் அணியாத 4 பேருக்கு ரூ. 400-ம், விதிகளை மீறி கடைகளை திறந்திருந்த 13 பேருக்கு ரூ.13 ஆயிரத்து 400-ம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தற்போது வரை 514 பேருக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.