தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு ஏலக்காய் விவசாயிகள் ஏலக்காய் எஸ்டேட்டுகளை பராமரிக்க வியாழக்கிழமை முதல் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான பல ஆயிரக்கணக்கான பரப்பளவில் ஏலக்காய் எஸ்டேட்டுகள் இடுக்கி மாவட்டப்பகுதியில் உள்ளது. கரோனா தொற்று காரணமாக சுமார் 80 நாட்களாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளா செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையில் 80 நாட்களாக ஏலக்காய் தோட்டங்கல் பராமரிப்பின்றி கிடந்தது.
தற்போது ஜீன் மாதம் சீசன் காலமாதலால் பராமரிக்காவிட்டால், ஏல விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க கூடிய அபாயம் இருந்தது. மேலும் புத்தடியில் நறுமணப்பொருள்கள் வாரியம் நடத்தும் ஏலக்காய் ஏலத்திற்கும் செல்ல முடியவில்லை. இதனால் ஏலக்காய் வரத்து நின்றதோடு, விலையும் குறைந்தது.
இதற்கிடையில், வியாழக்கிழமை முதல் தேனி மாவட்டத்திலிருந்து கேரள செல்ல ஏல விவசாயிகளுக்கு இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனுமதியளித்துள்ளது.
அதன் பேரில் ஏல விவசாயிகள் இ பாஸ் க்கு விண்ணப்பித்து அவர்கள் ஏலத்தோட்டங்களை பராமரிக்க ஒரு வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் புத்தடியில், ஸ்பைசஸ் போர்டு நடத்தும் ஏலக்காய் ஏலத்தில் கலந்து கொள்ள ஏலக்காய் வியாபாரிகள், ஆக்சன் கம்பெனி ஊழியர்களுக்கு ஒரு நால் மட்டும் இ.பாஸ் வழங்கியுள்ளது.
அதன் பேரில் வியாழக்கிழமை குமுளி சோதனைச்சாவடியில் இ பாஸ் அனுமதி பெற்ற விவசாயிகள், அனுமதியை காட்டி ஏலத்தோட்டங்களுக்கு சென்றனர்.