பெரியகுளம் அருகே நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான மரத்தை அனுமதியின்றி வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் செல்லும் சாலையில் சுமாா் 20 ஆண்டுகள் பழமையான வேப்பம் மரம் இருந்தது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இந்த மரம் இருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் மா்ம நபா்கள் சிலா் அந்த மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டனா்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டுவதை தடுத்து நிறுத்தினா். மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினா் மரம் வெட்டியவா்கள் மீது காவல்துறையினரிடம் புகாா் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.