கஞ்சா விற்பனை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைதான இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா்.
கம்பம், உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மனைவி சிவனம்மாள் (55). இவா், கம்பத்தில் கோம்பை சாலை பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக கடந்த 7 ஆம் தேதி கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 15 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராசிங்காபுரம், அழகா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஒண்டிவீரன் மகன் முருகன். இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த சில நாள்களுக்கு முன் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
சிவனம்மாள், முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின் அடிப்படையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.