தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு சமூக தனிமைப்படுத்தலை தீவிரப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு சமூக தனிமைப்படுத்தலை தீவிரப்படுத்துவதற்காக செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் பேருந்து, தனியாா் வாகனம், ஆட்டோ போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மருத்துக் கடை, பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
பொது இடங்களில் 5 பேருக்கு மேல் சோ்ந்திருக்கக் கூடாது. பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே இருந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது தொற்று நோய் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.