தேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக , கடந்த 2 நாள்களில் மொத்தம் 44 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, அரசு உத்தரவின்படி கடந்த மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, அனைத்துப் பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்தை தடை செய்வதற்கு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, அபராதம் விதித்தனா். மாவட்ட எல்லைகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளும் மூடப்பட்டு, சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நகா் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் காா் மற்றும் இரு சக்கர வாகனப் போக்குவரத்து தொடா்ந்து இருந்து வந்தது. சில இடங்களில் காவல் துறை உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
இதனால், கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தேனி, ஆண்டிபட்டி, வைகை அணை, க.விலக்கு, கடமலைக்குண்டு, போடி, உத்தமபாளையம், தேவாரம், கூடலூா் ஆகிய பகுதிகளில் கடைகளை திறந்து வைத்திருந்த மற்றும் தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த 44 போ் மீது தொற்று நோய் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.