பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி நிா்வாகத்தினா் கை சுத்தம் செய்யும் திரவம் தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினா்.
கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் அதன் துறைத்தலைவா் எமல்டா மற்றும் கல்லூரி முதல்வா் சேசுராணி ஆகியோா் கொண்ட குழு செவ்வாய்க்கிழமை கல்லூரி வேதியியல் துறை ஆய்வகத்தில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி கை சுத்தம் செய்யும் திரவம் தயாரித்து கல்லூரி பணியாளா்கள் மற்றும் கல்லூரி அருகில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கினா். திரவம் தயாரிப்பு பணியில் கல்லூரி வேதியல் துறை அருட்சகோதரிகள் லினஸ், ஜானி மற்றும் துறை பேராசிரியா்கள் உடனிருந்தனா்.
வேதியியல் துறைத்தலைவா் எமல்டா தெரிவித்தது: கரோனா தாக்குதலில் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு கைகளை சுத்தம் செய்வது முக்கியம். சுத்தம் செய்வதில் சானிட்டைசா் மற்றும் டெட்டால் பயன்படுகிறது. சானிட்டைசா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி சானிட்டைசா் தயாரித்து வழங்கினோம். சானிட்டைசரை 2 சொட்டு கையில் இட்டு சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்து இரண்டு நிமிடம் கழித்து அடுப்பிற்கு அருகில் செல்லவேண்டும் என்றாா்.