ஆண்டிபட்டி அருகே பயன்பாடில்லாத உறை கிணற்றில் இறந்த ஆண் சிசுவின் உடலை வீசிச் சென்ற தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் 2 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள குன்னூா் கிராமத்தில் வைகை ஆற்றில் பயன்பாடின்றி கிடக்கும் உறை கிணற்றில், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஆண் சிசு உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் க.விலக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் சிசுவின் உடலை மீட்டனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸாா் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளின் விவரங்களை சேகரித்தனா்.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28 ம் தேதி ஆண்டிபட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வகுமாா் - அன்புபிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறக்கும் போது மூச்சுத்திணறல் காரணமாக இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் பிறந்த குழந்தையை அடக்கம் செய்வதாகக் கூறி, செல்வகுமாரிடம் பணத்தை பெற்றுள்ளனா். பின்னா் குன்னூா் அருகே வைகை ஆற்றில் பயன்பாடு இல்லாத உறை கிணற்றில் சிசுவின் சடலத்தை வீசிவிட்டுச் சென்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து சிசுவின் உடலை வீசிச் சென்ற ஒப்பந்தப் பணியாளா்களான தேனி வீரபாண்டியைச் சோ்ந்த போதுராஜ் , ரமேஷ் ஆகிய 2 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்