தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் நிவாரண தொகை பெறுவதற்காக முறையான அறிவிப்பு இல்லாமல் அலைக்கழிப்பு செய்யப்படுவதால் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன் கரோனா பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர், உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்யும் தொழிலாளர்கள் 17 வகையான தொழிலாளர் நல வாரியங்களின் கீழ் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்களுக்கு ரூ.1000 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.2000 வழங்க தமிழக அரசு உத்திரவிட்டது. இதனை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் 12 ஆயிரம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகள் நலவாரிய அலுவலகத்தில் இணைக்கவில்லை எனக் கூறி சில தினங்களுக்கு முன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைய தளத்தில் வங்கிக் கணக்கு கொடுக்காதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்கள் வங்கி கணக்கு விபரங்களை தொழிலாளர் நலவாரிய இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தன் அடிப்படையில் தொழிலாளர்களும் தற்போது வங்கி கணக்கு விபரங்களை அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கி அதன் விபரத்தை அனுப்ப வேண்டும் என நலவாரிய அலுவலகத்தில் தெரிவித்ததாக கூறி நூற்றுக்கணக்கானோர் தேனி மாவட்டத்தின் பல்வேறு அஞ்சலகங்களில் கூட்டமாக கூடி வருகின்றனர். இதனால் சமூக விலகல் கடைபிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளதுடன், கரோனா பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் நலவாரியம் முறையான அறிவிப்பு வெளியிடாமல் தொழிலாளர்களை அலைக்கழிப்பு செய்து வருவதால் தொழிலாளர்கள் குழப்பமும், அவதியும் அடைந்து வருகின்றனர்.