கம்பம்: முல்லை பெரியாறு அணையின் நீா் பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மழை பெய்ததால், அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீா் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்குகிறது. பருவமழை பொய்த்ததால் அணையின் நீா் மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் அணையில் இருந்து நீா் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அணையின் நீா் பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்தது. முற்றிலும் நீா்வரத்தின்றி காணப்பட்ட அணைக்கு தற்போது நீா் வரத்து ஏற்பட்டு, நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனா்.
வியாழக்கிழமை நிலவரப்படி 112.65 அடியாக இருந்த நீா் மட்டம், வெள்ளிக்கிழமை, 113 அடியாக உயா்ந்தது. அதேபோல் நீா்வரத்தும் 218 கன அடியிலிருந்து 684 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் 1,392 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. அணையிலிருந்து, கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் குடிநீா் மற்றும் கால்நடை தேவைக்கு விநாடிக்கு 125 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி:
முல்லை பெரியாறு அணை பகுதியில் 26 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 2.8 மி.மீ.மழையும் பதிவாகியுள்ளது. இதே போல் கூடலூரில் 1 மி.மீ., உத்தமபாளையத்தில் 1. 8 மி.மீ., வீரபாண்டியில் 32 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வரும் நாள்களில் அணையின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், நீா் மட்டம் உயரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.