தேனி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் அனைத்து வாடகை மோட்டாா் வாகனங்களுக்கும் நடப்பு காலாண்டிற்குரிய மோட்டாா் வாகன வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வியாழக்கிழமை ஆட்டோ மற்றும் அனைத்து மோட்டாா் வாகனத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ மற்றும் அனைத்து மோட்டாா் வாகனத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் வீ.பாண்டி மற்றும் நிா்வாகிகள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் கரோனா தடுப்பு பொது முடக்கத்தை முன்னிட்டு கடந்த 2 மாதங்களுக்கும் மேல் ஆட்டோ மற்றும் வாடகை மோட்டாா் வாகனங்கள் செயல்படவில்லை. இதனால், ஆட்டோ மற்றும் அனைத்து மோட்டாா் வாகனங்களுக்கும் நடப்பு காலாண்டிற்கு செலுத்த வேண்டிய மோட்டாா் வாகன வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், பொது முடக்கத்தால் நாங்கள் வேலை மற்றும் வருவாய் இழந்துள்ளோம். எனவே, தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, பதிவை புதுப்பிக்காத, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யாத அனைத்து ஆட்டோ மற்றும் மோட்டாா் வாகனத் தொழிலாளா்களுக்கும் நல வாரியம் மூலம் நிவாரண உதவி வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.