ஆண்டிபட்டி அருகே வேன் மோதி கணவன்-மனைவி பலி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வாசகர், இவர் கொத்தனார் வேலைசெய்து வந்தார். இவரது மனைவி பெயர் அமுதா. இவர்கள் இருவரும் இன்று தேனி அருகே உள்ள சிந்தலைச்சேரி கிராமத்தில் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் வருசநாடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கடமலைக்குண்டு அருகே உள்ள அய்யனார்கோவில் பகுதியில் சென்ற போது எதிரே தக்காளி ஏற்றிக்கொண்டு வந்த வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த வாசகர், அமுதா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கடமலைக்குண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.