முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தேக்கடி, பெரியாறு, முல்லையாறு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த நவ.1-ல் அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 385 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் வியாழக்கிழமை அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 860 கன அடியாக இருந்தது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்கு 1,184 கனஅடியாக வரத்து வந்தது. பெரியாறு அணைப் பகுதியில் 17.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 7.7 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
அணை நிலவரம்-: வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 124.20 அடியாகவும், நீர் இருப்பு 3,460 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 1,184 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் வெளியேற்றமும் நடைபெற்றது.
மின்சார உற்பத்தி: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் மூலம் லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள 4 மின்னாக்கிகளில் முதல் அலகில், 42 மெகாவாட், மூன்றாவது அலகில், 42 மெகாவாட் , நான்காவது அலகில், 38 மெகாவாட் என மொத்தம் 122 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.