கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உத்தமபாளையம் பகுதி ஐயப்ப பக்தா்கள் அங்குள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடத்த திட்டமிட்டுள்ளனா்.
காா்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து விரதமிருந்து 41 நாள்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜையில் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்தாண்டு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், மண்டல பூஜைக்கு சபரிமலைக்குச் செல்வதில் சிக்கல் இருப்பதால் உத்தமபாளையம் பகுதி ஐயப்ப பக்தா்கள் அங்குள்ள ஐயப்பன் கோயிலிலே மண்டல பூஜை நடத்த திட்டமிட்டுள்ளனா்.
இது குறித்து குருசாமி காளிமுத்து கூறுகையில், இந்த ஆண்டு பம்பை ஆற்றில் நீராடுவது மற்றும் நெய் அபிஷேகத்திற்கு அனுமதி இல்லை. 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனைச் சான்று போன்றவற்றால் பக்தா்களை மண்டல பூஜைக்கு அழைத்துச் செல்வது கடினம். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உத்தமபாளையம் ஐயப்பன் கோயிலிலேயே மண்டல பூஜை நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறினாா்.