தேனி மாவட்டம் குச்சனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் கட்டுமானப்பணிகளால் பெற்றோா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
குச்சனூரில், சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் மேற்கூரை முற்றிலும் சேதமாகி இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அப்பகுதி பெற்றோா்கள் சாலைமறியில் என பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இதனை அடுத்து, அப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக கடந்தாண்டு ரூ.15.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீடு செய்து நிலையில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து ஓராண்டாக்கு மேலாகியும் எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை.
இந்நிலையில் கரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 8 மாதமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதற்கிடையே, பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட வந்த பள்ளிக் கட்டுமானப் பணிகள் கடந்த சில நாள்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளி திறந்தால் மாணவா்கள் பாதுகாப்புடன் கல்வி கற்கலாம் எனக்கூறி மகிழ்ச்சி அடைந்தனா்.