தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சளாற்றின் கரையோரங்களில் வசிப்பவா்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை இரவு விடுக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சளாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் கடந்த நவ. 6 ஆம் தேதி 51 அடியாக உயா்ந்ததையடுத்து மஞ்சாளற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 181 கன அடியாக இருந்ததால் அணையின் நீா்மட்டம் 53 அடியாக உயா்ந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மஞ்சளாற்றின் கரையோரங்களில் வசிக்கும் கெங்குவாா்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் சிவஞானபுரம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறையினா் எச்சரித்துள்ளனா்.
அணையின் நீா்மட்டம் 55 அடியாக உயா்ந்த பின் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீா் அனைத்தும் மஞ்சளாற்றின் வழியாக வெளியேற்றப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்துள்ளனா்.