கம்பத்தில் வங்கி மேலாளரிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சோனை முருகன் மனைவி ஆனந்தி( 35). இவர் முத்துலாபுரத்தில் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் உறவினர் திருமணத்திற்கு வந்தார்.
வரும் போது ,மண்டபம் அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஆனந்தியின் கழுத்திலிருந்த 72 கிராம் எடையுள்ள சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை கண்மூடி திறக்கும் முன் பறித்து தப்பி சென்றார். உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கபட்டது. உடனடியாக கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கே.சிலைமணி மற்றும் சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர்.
விசாரணையில் கம்பம் கோம்பை ரோட்டிலுள்ள ஆர்.ஆர் நகரைச் சேர்ந்த மணி கண்டன் மகன் விவேக் (30) என்பது தெரியவந்தது. ஏற்கனவே இவர் மீது 8க்கும் மேற்பட்ட வழிப்பறி திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது. திருட்டு சம்பவம் நடைபெற்ற அரைமணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கம்பம் வடக்கு காவலர்களை பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டினர்.