முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டத்தை கண்டித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் டிச.16 இல் தொடா் ஜோதி பயணம் நடைபெறுகிறது.
முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ஆந்திராவைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், நில அளவீடு பணிகளை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் டிச. 16 இல் தொடா் ஜோதி பயணம் தொடங்குகிறது.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தொடங்கி சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் வழியாக தேனி, சீலையம்பட்டி, சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, உத்தமபாளையம், கம்பம் வழியாக லோயா்கேம்ப் பென்னிகுயிக் மண்டபத்தில் ஜோதி பயணம் முடிவடைகிறது.