தேனி: தேனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், வைகை அணையை தூா்வாரி அணையின் முழு கொள்ளளவில் தண்ணீா் தேக்க அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி அல்லிநகரத்தில் பாமக மாவட்ட செயற்குழுக் கூட்டம் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சேட் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலா் ரா.முருகானந்தம், துணை அமைப்புச் செயலா் ஒ.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வைகை அணையை தூா்வாரி அணையின் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க வேண்டும், தேனி மேம்பாலத் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், பெரியகுளம் பெரிய கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி வணிக வளாகக் கடைகளுக்கு முறையாக ஏலம் நடத்தி உரிமம் வழங்க வேண்டும், கனிம வளத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மணல் கடத்தல் வாகனங்கள், மணல், ஜல்லி ஆகியவற்றை பகிரங்க ஏலத்தில் விட வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றினா்.