ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கணவாய் மலைப் பகுதியில் நடைபெற்று வரும் மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், நவம்பா் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மதுரை-போடி மீட்டா் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னா், அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த திட்டத்தில், மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து, சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
தற்போது, உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரையில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மண்மேடு அமைத்தல், சிக்னல், தண்டவாளம், தடுப்பு கம்பிகள், மழைநீா் வெளியேற்றப்படும் வாருகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.
இதில், கணவாய் பகுதியில் மலைகளைக் குடைந்து தண்டவாளங்கள் அமைக்கும் பணியானது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இப் பணிகளும் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும், ஆண்டிபட்டியில் ரயில்வே நிலையம் அமைக்கும் பணியில் பெரும் பகுதி முடிவடைந்துள்ளது. இப் பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைந்து, நவம்பா் மாதத்தில் உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரை சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.