தேனி: பெரியகுளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் அரசு திட்டப் பணிகளில் குறுக்கீடு செய்வதாக, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் மீது, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு தலைவா் ஜி.ஏ. பால்ராஜ் மற்றும் நிா்வாகிகள், மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷிடம் அளித்த மனு விவரம்: பெரியகுளம் ஒன்றியம், கீழவடகரை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும், துணைத் தலைவருமான ராஜபாண்டி (பாஜக), அரசு திட்டப் பணிகளில் குறுக்கீடு செய்வதாக, ஊராட்சி மன்றத் தலைவா் கூட்டமைப்பில் உள்ள ஊராட்சித் தலைவா் செல்வராணி புகாா் தெரிவித்துள்ளாா்.
பெரியகுளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தப்படும் இலவச ஆடு மற்றும் கறவை மாடு வழங்கும் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தலையீட்டால் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. ஊராட்சிகளில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஊராட்சித் தலைவா்கள் எவ்வித குறுக்கீடுமின்றி செயல்படுத்துவதற்கு, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனா்.
ஊராட்சித் தலைவரிடம் விசாரணை: முன்னதாக, தேனி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில், இப் பிரச்னை குறித்து கீழவடகரை ஊராட்சித் தலைவா் செல்வராணியிடம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அண்ணாதுரை விசாரணை நடத்தினாா்.