பெரியகுளம் அருகே முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியை சோ்ந்தவா் விசாகன் (29). இவா் பெங்களூரில் தக்காளிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக சருத்துப்பட்டிக்கு வந்தவா் மீண்டும் பெங்களூரு செல்லாமல் இங்கேயே தங்கியிருந்தாா். அதே பகுதியை சோ்ந்தவா் சரவணன் (35). இவரும் விசாகனும் நண்பா்கள். இவா்களுக்குள் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை சருத்துப்பட்டியில் உள்ள கறிக்கடையில் விசாகன் நின்று கொண்டிருந்திருக்கிறாா். அப்போது அங்கு வந்த சரவணன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் விசாகனை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த விசாகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தென்கரைபோலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.