தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வராக நதியைக் காப்போம் திட்டப் பணிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூஜை செய்தும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் என்றும் வற்றாத நதியாக வராக நதி ஓடுகிறது. வராக நதியின் கரையின் ஒரு புறம் தென்கரை என்றும் மறுபுறம் வடகரை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. காசிக்கு அடுத்தாற்போல் வராகநதியின் ஒரு கரையில் ஆண் மருத மரமும், மறு கரையில் பெண் மருத மரமும் உள்ளது. இது மிக சிறப்பு வாய்ந்தது என்று ஏராளமான ஆன்மீகவாதிகள், பக்தர்கள் இந்த வராக நதியில் புனித நீராடி வந்தனர்.
மேலும் வராகநதியின் தென் கரையில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, ஸ்ரீ பாலசுப்பிரமணியர் என மூன்று சன்னதிக்கும் தனித்தனி கொடிமரம் கொண்டு சிறப்பு வாய்ந்த பெரிய கோவில் என்று அழைக்கப்படும் திருத்தலம் உள்ளது.
சுமார் 30 கிலோ மீட்டர் பயணிக்கும் வராக நதியை கொண்டு 3000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கரைகளின் மணல் பரப்பில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் பொதுக் கூட்டங்களும் நடந்ததுண்டு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த வராக நதி இன்று கழிவு நீர் கலந்தும், குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாக மாறி மாசடைந்து, தூர் நாற்றம் வீசும் இடமாகவும், கொசு உற்பத்தி செய்யும் இடமாகவும் மாறியுள்ளது.
மாசடைந்துள்ள வராக நதியை தூய்மைப்படுத்திட வேண்டும் என்று தாமரைக்குளம் விழுதுகள் இளைஞர் மன்றம் உள்ளிட்ட தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் துணை முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் கடந்த வாரம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார் தலைமையில் “வராக நதியைக் காப்போம்” ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பெரிய கோவில் படித்துறையில் வராக நதியைத் தூய்மைப்படுத்தும் பணியை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பூஜை செய்தும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம் சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.