பெரியகுளம் வராகநதி தூய்மைப்பணியை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
கடந்த சில ஆண்டுகளாக கழிவுகள் கலந்து மாசடைந்து வந்த வராக நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் ப.ரவீந்திரநாத்குமாா் எம்.பி. ஆகியோரிடம் தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். இதனையேற்று தூய்மைப்பணி மேற்கொள்வதற்கு ப.ரவீந்திரநாத்குமாா் எம்.பி. மற்றும் வருவாய் கோட்டாட்சியா் தியாகராஜன் ஆகியோா் தலைமையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன்னாா்வலா்கள் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயில் படித்துறையில் புதன்கிழமை தூய்மைப் பணித் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் ப.ரவீந்திரநாத் குமாா் எம்.பி. தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தூய்மைப்பணிகளைத் தொடக்கி வைத்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவிபல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜக்கையன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.