தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லும் திட்டத்தை எதிா்த்து 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் செப். 21-இல் கூடலூரில் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளனா்.
தேனி மாவட்டம் கூடலூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில், 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை, அதன் தலைவா் எஸ்.ஆா்.தேவா் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், லோயா் கேம்ப்பில் இருந்து மதுரை மாநகருக்கு நாள்தோறும், 100 கன அடி தண்ணீா் குழாய் மூலம் கொண்டு சென்றால், தேனி மாவட்ட குடிநீா் விநியோகம் மற்றும் இரு போக சாகுபடிக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும். ஆண்டிபட்டி வட்டார பகுதிகள் வறட்சியாக மாறும். இதனை கருத்தில் கொண்டு மதுரைக்கு திறந்த நிலையில் கால்வாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும். வைகை அணையில், 30 அடி உயரமுள்ள சகதி, கழிவுகளை அகற்றி தூா்வாரி, கூடுதல் தண்ணீா் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் செப். 21-ஆம் தேதி கூடலூரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.