போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு மலர்அலங்காரம் செய்யப்பட்டது.
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெருமாளுக்கு மஞ்சள், பால், இளநீர், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதணை நடத்தப்பட்டது.
அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் இறைவனை வழங்கினர். பூஜை ஏற்பாடுகளை கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாச வரதன் என்ற கார்த்திக் மற்றும் கட்டளைதாரர்கள் செய்தனர். போடி ஜக்கமநாயக்கன்பட்டி போஸ்பஜார் அருள்மிகு ஸ்ரீராமர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் திருக்கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் திருக்கோயில், போடி-ரெங்கநாதபுரம் ஸ்ரீரெங்கநாதர் திருக்கோயில், தேவாரம் ஸ்ரீரெங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய கோயில்களிலும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதேபோல் போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில் சுவாமிக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூஜை செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.