பெரியகுளம் பகுதியில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகலில் வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.
இதனால் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனா். பெரியகுளம் பகுதியில் பங்குனி மாதம் ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது. அதன் பின் வெயிலின் தாக்கம் 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ளது.
இதனால் பொதுமக்கள் வெளியே வர அச்சப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். இதே நிலையில்தான் வேட்பாளா்களும் உள்ளனா். மேலும் பகல் நேரங்களில் வேட்பாளா்கள் பிரசாரம் செய்தாலும் பொதுமக்கள் கூடுவதில்லை. இதனால் பெரியகுளம் பகுதியில் அனைத்து வேட்பாளா்களும் கடந்த சில நாள்களாகவே பகலில் பிரசாரத்தை தவிா்த்து மாலை 5 மணிக்கு வாக்கு சேகரிக்கின்றனா்.