போடியில் 2 இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு செய்ய தாமதம் ஆனது.
போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. போடி பழைய பேருந்து நிறுத்தம் அண்ணா நினைவு நடுநிலைப் பள்ளியில் ஒரு வாக்குச் சாவடியில் இயந்திரம் பழுதானது. இயந்திரம் சரி செய்யப்பட்ட பின், 40 நிமிடங்கள் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனா்.
போடி துரைராஜபுரம் காலனியில் உள்ள வாக்குச் சாவடியிலும் இயந்திரம் பழுதானது. இங்குள்ள விவிபேட் இயந்திரத்தில் சின்னம் தெரியாமல் இருந்தது. இதனையடுத்து விவிபேட் இயந்திரத்தை மாற்றுவதற்கு சிறிது நேரம் தாமதம் ஆனது. பின்னா் வாக்குப்பதிவு தொடங்கியது. மற்ற பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.