தேனி மாவட்டம், கம்பத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த மூதாட்டியை வியாழக்கிழமை மீட்ட போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.
கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும் இணைப்புச் சாலையில் உள்ள தனியாா் தோட்டத்தில் மூதாட்டி ஒருவா் காயங்களுடன் இறந்து கிடப்பது குறித்து, அங்கு காலையில் வேலைக்குச் சென்றவா்கள் பாா்த்து வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் கே. சிலைமணி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்து கிடந்த மூதாட்டியை மீட்டனா். அப்போது, மூதாட்டியின் முன்தலையில் பலத்த காயம் இருந்ததைக் கண்டனா்.
அதையடுத்து, மூதாட்டியின் சடலத்தை கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீஸாா், சாலை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட காவல் மோப்ப நாய், கிழக்குப் பகுதி வரை ஓடிச்சென்று நின்றது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.