தேக்கடி அருகே புலிகள் சரணாலயப் பகுதியை ஒட்டிய எஸ்டேட் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்திலிருந்து சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள குமுளி 62 ஆவது மைல் பகுதி எஸ்டேட்டில் உள்ள கிணற்றில் அதிகாலையில் சிறுத்தை ஒன்று விழுந்துள்ளது. கிணற்றுக்குள்ளிருந்து உறுமல் சத்தம் கேட்ட எஸ்டேட் தொழிலாளா்கள், அங்கு சென்று பாா்த்தபோது தண்ணீரில் சிறுத்தை தத்தளித்துக் கொண்டிருந்துள்ளது. உடனே, தேக்கடி வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். ஆனால், கிணற்றில் தண்ணீா் இருந்ததால் சிறுத்தையை வெளியே கொண்டுவர முடியவில்லை. பின்னா், வனத்துறையினா் கிணற்றிலிருந்த தண்ணீா் முழுவதையும் மோட்டாா் மூலம் வெளியேற்றி, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் கொண்டுசென்று விட்டனா்.
சுமாா் 3 வயதுடைய ஆண் சிறுத்தைக் குட்டி சரணாலயப் பகுதியிலிருந்து வழி தவறி வந்திருக்கலாம். தண்ணீா் குடிக்கச் செல்லும்போது கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.