தேனி மாவட்டம் சின்னமனூா் சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன.
சின்னமனூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாா்க்கையன்கோட்டை , குச்சனூா், அய்யம்பட்டி போன்ற பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதேபோல் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகி இருந்த செவ்வாழை, பூவன், நாட்டு வாழை ,நேந்திரம் உள்ளிட்ட மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வாழை விவசாயத்தில் அறுவடை வரையில் மருந்து , பராமரிப்புச் செலவு என ஒரு கன்றுக்கு ரூ.150 வரையில் செலவாகிறது. ஒவ்வொரு விவசாயியும் குறைந்தது ஆயிரம் வாழைகளுக்கு ரூ. 1.50 லட்சம் வரையில் செலவு செய்திருந்தனா். இந்நிலையில் அறுவடைக்கு தயாராகியிருந்த நிலையில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவாசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.