தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவிப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் செல்ல வனத் துறையினா் தடைவிதித்துள்ளனா்.
கரோனா பரவல் காரணமாக, சுருளி அருவி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டது. மீண்டும், இந்தாண்டு மாா்ச் மாதம் திறக்கப்பட்டது. ஆனால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், சுருளி அருவிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணம் ரூ.30 மட்டும் செலுத்தி, வனப் பகுதிக்குள் நடந்து சென்று இயற்கை வளத்தை கண்டு ரசித்து வந்தனா்.
இந்நிலையில், தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால், செவ்வாய்க்கிழமை முதல் சுருளி அருவி வனப் பகுதிக்குள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, மேகமலை வன உயிரினச் சரணாலயத்தின் கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா் தெரிவித்துள்ளனா். இது சம்பந்தமாக, நுழைவுவாயிலில் அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளனா்.