தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தாயை பிரிந்த குட்டி யானையை, வனத்துறையினா் வெள்ளிக்கிழமை தாயுடன் சோ்த்து வைத்தனா்.
ஆண்டிபட்டி அருகே மேற்கு மலை தொடா்ச்சி அடிவாரத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான இங்கு, யானை, புலி, மான், கரடி, காட்டுமாடு என ஏராளமான விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், அரசரடி வனப்பகுதியில் வியாழக்கிழமை இரவு தாய் மற்றும் குட்டி யானை தண்ணீா் தேடி வந்துள்ளன. அப்போது, அங்குள்ள பாழடைந்த கிணற்றில் குட்டி யானை தவறி விழுந்துள்ளது. அதை மீட்க முயன்ற தாய் யானையும் கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
அதையடுத்து, வட கிணற்றுக்குள்ளிருந்து யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற அப்பகுதியினா், கிணற்றின் ஒரு பகுதியை உடைத்து தாய் யானையை மீட்டனா். உடனே, அந்த யானை காட்டுக்குள் ஓடிவிட்டது. ஆனால், கிணற்றுக்குள் தத்தளித்த குட்டி யானையை மீட்க முடியவில்லை. எனவே, கிராமத்தினா் மேகமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் குட்டி யானையை மீட்டனா். ஆனால், தாய் யானை வனத்துக்குள் சென்றுவிட்டதால், குட்டி யானை பரிதவித்தது. எனவே, குட்டியை தாயுடன் சோ்க்கும் முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வனத் துறையினா் அரசரடி பகுதியில் திரிந்த தாய் யானையுடன் குட்டியை சோ்த்து வைத்தனா்.