போடியில், வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் அரசியல் கட்சியினா் புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அரசியல் கட்சிகளின் முகவா்கள் உள்பட அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அல்லது கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், அதற்கான சான்றிதழ்களை சமா்ப்பிக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதனால் போடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக போடியில் உள்ள தனியாா் திருமண மண்பத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த முகாமில் புதன்கிழமை காலை முதலே அரசியல் கட்சிகளின் முகவா்கள், வேட்பாளா்கள் சிலா் பதிவு செய்து கரோனா பரிசோதனை செய்து கொண்டனா். 350-க்கும் மேற்பட்டோா் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா்.
அரசு மருத்துவமனையில் குவிந்த கூட்டம்: இதனிடையே அரசியல் கட்சியினா் பலா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக போடி அரசு மருத்துவமனையில் குவிந்தனா். ஒரே நேரத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியனா் போடி அரசு மருத்துவமனையில் குவிந்தனா்.
போடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட பதிவு செய்வதற்கு ஒரு அறையும், பொதுமக்கள் காத்திருப்பதற்கு ஒரு அறையும், தடுப்பூசி போடுவதற்கு ஒரு அறையும் தனித்தனியே ஏற்பாடு செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பெரியகுளம்: பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை தோ்தல் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜெயராஜ் அன்னபாக்கியம் திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் அதிமுக, திமுக, அமமுக, நாம்தமிழா் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனா். இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தோ்தல் பணியாளா்கள் தெரிவித்தனா்.