கம்பம்: மூணாறில் உள்ள எரவிகுளம் தேசியப் பூங்காவில் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியுள்ளது.
இங்கு ஆண்டுதோறும் கேரள வனத்துறையினர் நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவர். அதன்படி இந்த ஆண்டுக்கான வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில், 66 வன ஆர்வலர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தக் கணக்கெடுப்புப் பணியில் சமூக ஆர்வலர்களின்றி வனத்துறையினர் மட்டும் பங்கேற்றுள்ளனர். வனப்பகுதி 22 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு ஒரு வன அலுவலர், 2 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வனத்துறையினருக்கு கணக்கெடுப்புப் பணிக்கான முக்கிய குறிப்புகளை வன உயிரின சரணாலயக் காப்பாளர் ஆர்.வரலட்சுமி கொடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 723 நீலகிரி வரையாடுகள், 111 புதிதாகப் பிறந்த குட்டி வரையாடுகள் காணப்பட்டன.
இந்த ஆண்டு புதியதாக 98 குட்டி வரையாடுகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது கேரளாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் எரவிகுளம் தேசியப் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.