ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தில் பழைய நெகிழி மற்றும் இரும்புப் பொருள் கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஆண்டிபட்டி, சக்கம்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டி. இவா், முத்துகிருஷ்ணாபுரத்தில் பழைய நெகிழி மற்றும் இரும்பு பொருள்கள் வாங்கி விற்கும் கிட்டங்கி வைத்து நடத்தி வருகிறாா். இந்த கிட்டங்கியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரும்புகை வந்துள்ளது.
சிறிது நேரத்தில் கிட்டங்கிக்குள் தீ பரவி எரியத் தொடங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதியில் வசிப்பவா்கள் ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் கிட்டங்கியிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.