தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பேருந்துகளில் பயன்படுத்திய காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து காவல்துறை செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொதுமக்களை மிரள வைக்கும் வகையில், பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்ட காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் காவல்துறை மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு புகார் அளித்தனர்.
அதன்பேரில் செவ்வாய் கிழமை பேருந்து பழைய நிலைய சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வை. மனோகரன் மற்றும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் ஞான பண்டித நேரு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு மற்றும் தனியார் பஸ் மற்றும் லாரிகளில் போக்குவரத்து விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வாகனங்களில் விதிகளை மீறி காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார்.