தமிழக-கேரள எல்லை சோதனைச்சவடியில் ஜிப் ஓட்டுனர்கள், கேரளாவுக்கு செல்ல அனுமதி கோரி முற்றுகைப் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர்.
தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான கம்பம்மெட்டு மற்றும் குமுளி வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண்-பெண் தோட்டத் தொழிலாளர்கள் கம்பம் கூடலூர் வட்டார பகுதிகளில் இருந்து வேலைக்கு சென்று வந்தனர்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 4 மாதங்களாக கேரளாவுக்கு செல்ல யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
மேலும் கேரளாவுக்கு செல்ல இ.பாஸ், சளி தடவல் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ், 2 தடுப்பூசி போட்ட சான்றிதழ் இருந்தால் மட்டும் தமிழகத்திலிருந்து கேரளா செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து பல மாதங்களாக ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் ஆண் பெண் தொழிலாளர்கள், அவர்களை வேலைக்கு ஏற்றிச்செல்லும் ஜீப் ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிப்பதால் புதன்கிழமை தமிழக-கேரள எல்லையில் சோதனைச் சாவடிக்கு சென்றனர்.
அங்குள்ள கேரள சோதனைச் சாவடி அதிகாரிகளிடம் தங்களை கேரளாவுக்கு ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்தனர்.
காவல் நிலைய ஆய்வாளர் ஜானி ராபர்ட் தமிழக ஜீப் ஓட்டுனர்களிடம் பேசும்போது, மருத்துவ பரிசோதனை சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றார்.
கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கே.சிலை மணி முற்றுகை போராட்டம் நடத்திய ஓட்டுநர்களிடம் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி விரைவில் கேரளா செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி கூறினார் அதன்பேரில் முற்றுகை போராட்டம் நடத்திய ஓட்டுனர்கள் கலைந்து சென்றனர்.