போடிமெட்டு மலைச்சாலையில் ஜீப்புகள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
கேரள மாநிலம் சூரியநெல்லியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் தம்பிதுரை (39). இவர் போடி பகுதியிலிருந்து காய்கனி ஏற்றிக்கொண்டு கேரளத்துக்கு சென்றுள்ளார். புலியூத்து மேல் மலைச்சாலை வளைவில் திரும்பியுள்ளார். அப்போது கேரளத்திலிருந்து தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த மற்றொரு ஜீப், காய்கனி ஏற்றிச் சென்ற ஜீப் மீது மோதியது.
இந்த விபத்தில் தம்பிதுரை, மோதிய ஜீப்பில் வந்த தோட்டத் தொழிலாளர்கள் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த சுப்பையா மனைவி பொம்மியம்மாள் (60), போடி மல்லிங்காபுரத்தைச் சேர்ந்த அர்ஜூன் பெருமாள் மனைவி அருள்சித்ரா(45), சுப்புராஜ் மனைவி பார்வதி(45) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அங்கு வந்த மற்ற தோட்டத் தொழிலாளர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனை மற்றும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து காய்கனி ஜீப் ஓட்டுநர் தம்பிதுரை கொடுத்த புகாரின் பேரில் போடி குரங்கணி போலீஸார் மற்றொரு ஜீப் ஓட்டுநர் ராஜாராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.