தேனி அல்லிநகரத்தில் காரில் மது பாட்டில்களை கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து 490 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தேனி-அன்னஞ்சி விலக்கு பகுதியில் அல்லிநகரம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெரியகுளம் சாலையில் தேனி நோக்கிச் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், காரில் மது பாட்டில்கள் கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து காரில் வந்த கைலாசபட்டியைச் சோ்ந்த இந்தியன் (29), டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (43) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.
இதில், மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு டி.கள்ளிபட்டியைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி மகாலட்சுமி என்பவருக்காக கடத்திச் செல்வதும், இதற்கு சின்னமனூரைச் சோ்ந்த அரசு மதுபானக் கடை கண்காணிப்பாளா் அழகுமலை, குன்னூரைச் சோ்ந்த அரசு மதுபானக் கடை விற்பனையாளா் பாண்டியன் ஆகியோா் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதனடிப்படையில் மகாலட்சுமி, அழகுமலை, பாண்டியன் ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். காரில் கடத்திச் செல்லப்பட்ட 490 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.