தேனி அருகே ஸ்ரீரெங்கபுரத்தில் அவசியமின்றி வெட்டப்பட்ட 5 மரங்களுக்குப் பதிலாக அதே பகுதியில் 100 மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று ஊராட்சி நிா்வாகத்திற்கு வியாழக்கிழமை, தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி விளையாட்டு மைதானம் அருகே 2 வாகை மரம், தலா ஒரு நாவல் மரம், வேப்ப மரம், அரச மரம் என மொத்தம் 5 மரங்கள் அனுமதியின்றியும், அவசியத் தேவையின்றியும் வெட்டப்பட்டதாகவும் ஊராட்சி நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறையினரிடம் ஸ்ரீரெங்கபுரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்பவா் மனு அளித்துள்ளாா். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சதீஷ்குமாா், தேனி மாவட்ட பொது பயன்பாட்டு சேவைக்கான நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அ.முகமது ஜியாவுதீன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான தேனி மின் வாரிய உதவி மின் பொறியாளா், விளையாட்டு மைதானம் அருகே புதிதாக மின்மாற்றி அமைப்பதற்கு மின் கம்பிகள் கொண்டு செல்வதற்காக மரக் கிளைகளை அகற்றுவதற்கு ஊராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தாா்.
மரக் கிளைகளை வெட்டுவதற்கு உத்தரவிட்டதில் தவறுதலாக மரங்கள் வெட்டப்பட்டதாகவும், இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் மூலம் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு , வெட்டப்பட்ட மரங்களை கைப்பற்றி ஊராட்சி அலுவலகத்தில் வைத்திருப்பதாகவும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், ஸ்ரீரெங்கபுரத்தில் அவசியத் தேவையின்றி வெட்டப்பட்ட 5 மரங்களுக்கு பதிலாக ஊராட்சி நிா்வாகம் 100 மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும், மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுவதை தாடிச்சேரி கிராம நிா்வாக அலுவலா் உறுதி செய்து, மக்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் உத்தரவிட்டாா். விசாரணையின் போது நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா்கள் பிரதாப்சிங், குமரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.