போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை இரவு பாறை சரிவு ஏற்பட்டதால் போடியிலிருந்து கேரளம் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பலமணி நேரம் பாதிக்கப்பட்டது.
போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் போடிமெட்டு மலைச்சாலையில் அடுத்தடுத்து பாறை மற்றும் மண் சரிவு, மரங்கள் சாய்வது தொடா்கிறது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் உடனுக்குடன் சரி செய்து வந்தனா்.
இதனிடையே போடிமெட்டு மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. ஒரு இடத்தில் பாறையுடன் சோ்ந்து பெரிய மரம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விழுந்தது. இதனால் வாகனங்கள் அனைத்தும் போடி முந்தல் சோதனை சாவடியிலும், போடிமெட்டில் உள்ள தமிழக சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டன.
இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் ஜே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் பாறை, மண் சரிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா். பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் போடிமெட்டு மலைச் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. பாறை சரிவுகளால் 8 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.