பாவூர்சத்திரம்: தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை (டிச.10) காலை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளியன்றும், மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை நடைபெற்று வருகிறது. தற்போது நல்ல மழை பெய்து அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிய நிலையில் விவசாயம் செழிக்க வேண்டி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வருண கலச பூஜை நடைபெற்றது.
இதற்காக பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. நெல் நாற்று வைத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.