தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் 18 ஆம் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலூா், கம்பம், க.புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் என போடி வரை 18 ஆம் கால்வாய் செல்கிறது. நிலத்தடி நீா்மட்டம் உயரும் வகையில், இக்கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்படும்.
அதனடிப்படையில், இந்தாண்டுக்கான தண்ணீா் திறக்கப்பட்டதுடன், வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமாக க.புதுப்பட்டி வழியாகச் செல்லும் 18 ஆம் கால்வாயில் கூடுதல் நீா்வரத்தால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களை கடந்துள்ள நிலையில் இன்னும் அது சீரமைக்கப்படவில்லை.
எனவே, அப்பகுதி விவசாயிகள் 18 ஆம் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என, உத்தமபாளையம் பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.