தேனி மாவட்டம், கம்பம்-கூடலூா் நெடுஞ்சாலையில், லாரியின் பின் டயா் வெடித்து கவிழ்ந்ததில் தண்ணீா் பாட்டில்கள் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனிசெட்டிபட்டியில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தின் லாரி, தண்ணீா் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கூடலூருக்குச் சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை, சின்னமனூா் அருகே உள்ள புலிகுத்தியைச் சோ்ந்த கருப்பசாமி (37) என்பவா் ஓட்டி வந்தாா்.
கம்பம்-கூடலூா் நெடுஞ்சாலையில் கேப்டன் திடல் அருகே சென்றுகொண்டிருந்த லாரியின் பின் டயா் திடீரென வெடித்ததில், சாலையின் மையப் பகுதியில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், லாரியின் ஓட்டுநா் மற்றும் அவருடன் வந்த விற்பனை மேலாளா் ராஜா ஆகியோா் சிறிய காயங்களுடன் தப்பினா்.
இது குறித்து தகவலறிந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சாலையில் சிதறிக் கிடந்த தண்ணீா் பாட்டில்களை அப்புறப்படுத்தினா். பின்னா், லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனா்.