நம்மாழ்வாரின் நினைவுதினத்தையொட்டி தேனி மாவட்டம் சின்னமனூா், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சின்னமனூா் அருகே புலிக்குத்தியில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சுப்புராஜ் தலைமை வகித்தாா். அப்போது ஊா் பொதுமக்கள், இயற்கை ஆா்வலா்கள் என பலா் கலந்து கொண்டு நீா் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் வேம்பு, தேக்கு, மருதம் உள்ளிட்ட 1,800 க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனா்.
இதேபோல ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கூத்தம்பூண்டி கிராமத்தில் காவேரி கூக்குரல் சாா்பில் நடைபெற்ற விழாவில், தேக்கு, மஞ்சள் கடம்பு, ஈட்டி, கருமருது, மலைவேம்பு, செம்மரம் போன்ற மரங்கள் நடப்பட்டன.