ஆண்டிபட்டி வாரச்சந்தையில் தற்காலிக கடைகள் ஆக்கிரமிப்பை கண்டித்து வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதி மற்றும் கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து காய்கறிகள் மற்றும் பலசரக்கு சாமான்கள் வாங்கிச் செல்வார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் தங்கள் பொருள்களை இங்க கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கரோனா வைரஸ் நோய் பாதிப்பால் சாலையோர வியாபாரிகளை சந்தை பகுதியில் கடை அமைத்துக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் தற்காலிகமாக ஒதுக்கித் தந்தது. தற்போது பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சாலையோர வியாபாரிகள் வாரச்சந்தை பகுதியிலேயே கடை பரப்பி இருப்பதால், தங்கள் வார சந்தை வியாபாரம் பெரிதளவு பாதிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.
எனவே தற்காலிக கடைகளை காலி செய்து வேறு இடத்தில் அவர்களுக்கு ஒதுக்கித் தந்து, தங்கள் வார சந்தை வியாபாரம் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, திங்கள் கிழமை சந்தையை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.