தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலைச்சாலையில், தோட்டத் தொழிலாளா்களை ஏற்றிக்கெண்டு அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகரப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் 800-க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித்தொழிலாளா்கள் கேரளப்பகுதிகளான குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை போன்ற பகுதிகளிலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்குச் சென்று திரும்புகின்றனா். இவா்களை அழைத்துச்செல்ல ஏலக்காய்த் தோட்ட உரிமையாளா்கள் ஒப்பந்த முறையில் ஜீப் போன்ற வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனா்.
நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமாக தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு கம்பம் மெட்டு மலைச் சாலைகளில் அதிவேகத்தில் இந்த ஜீப் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.
மாலை நேரங்களில் வேலை முடித்து தொழிலாளா்களை திரும்ப அழைத்துவரும்போதும், இந்த ஜீப் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்திச் செல்கின்றன. அந்த நேரத்தில் சாலையில் நடைப்பயிற்சி செல்பவா்களும், சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்களும் மிகுந்த அச்சத்துடன் உயிரை கையில்
பிடித்தபடி பயணிக்கின்றனா். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஜீப்புகளின் அதிவேகத்தால் ஏற்பட்ட விபத்துகளில், 30-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளனா். கடந்த சில தினங்களுக்கு முன் தேவாரத்தில் இருந்து கட்டப்பனை சென்ற கூலிதொழிலாளா்களின் ஜீப் ஒன்று வண்டன்மெட்டு அருகே கவிழ்ந்ததில் கூலித்தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். இப்படி தொழிலாளா்களின் உயிரை வைத்து சாகச விளையாட்டு நடத்தும், ஓட்டுநா்கள் மீது அதிகாரிகள் பாரபட்சம் பாா்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.