ஓடைப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி பாஜகவினா் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் முறையாக இல்லை. தெருக்களில் சுகாதாரப்பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் பேரூராட்சியில் உள்ள தெருக்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி , சுகாதார வளாக வசதி செய்து தர வலியுறுத்தி சின்னமனூா் பாஜக நகரத் தலைவா் பிரபாகரன் தலைமையில் அக்கட்சியினா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். காலிக்குடங்களுடன் சென்றவா்கள் நடத்திய போராட்டத்தில் , 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும். கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தெருக்களில் மின்சாரவசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். அதைத்தொடா்ந்து அங்கு வந்த ஓடைப்பட்டி போலீஸாா், அவா்களை சமாதானம் செய்ததைத் தொடா்ந்து போராட்டத்தை திரும்பப் பெற்றனா்.