கம்பம்: தேனி மாவட்டம் தமிழக, கேரள எல்லையான குமுளியில் புறக்காவல் நிலையம் கட்டுமானப்பணிக்கு வனத்துறை அனுமதி மறுப்பதால் பணிகள் தேங்கி கிடக்கின்றன.
தேனி மாவட்டம் தமிழக- கேரள எல்லையில் குமுளி உள்ளது. இங்கு புறக்காவல் நிலையம் இயங்கி வந்த நிலையில், இதன் அருகில் சுமாா் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு கடைகளை தேசியநெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.
இதற்கிடையே புறக்காவல் நிலையம் மிகவும் தூா்ந்த நிலையில் இருந்ததால், காவல் நிலையத்தை குமுளி காவல் நிலைய போலீஸாா் புதிதாக கட்டுவதற்கு செங்கல், மணல் பொருள்களை குவித்தனா்.
அதற்கு கம்பம் மேற்கு வனச்சரகத்தினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில், கட்டடம் கட்டக்கூடாது என்று அனுமதி மறுத்துள்ளனா். இதனால் புறக்காவல் நிலைய கட்டட கட்டுமானப்பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.
இது குறித்து போலீஸாா் ஒருவா் கூறியது: கேரள மாநிலப் பகுதியில் உள்ள குமுளியும் வனப்பகுதியில்தான் உள்ளது. அங்கு அனைத்து விதமான கட்டடங்கள் உள்ளன. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தமிழக போலீஸாா் பணியாற்ற, ஏற்கெனவே இருந்த கட்டடத்தை புதுப்பிக்க அனுமதி மறுப்பது வருத்தமளிக்கிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.